
புதுடெல்லி: அமெரிக்காவின் ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம் அதிநவீன எம்கியூ-9 ரீப்பர் அல்லது பிரிடேட்டர்-பி ரக ட்ரோன்களை தயாரிக்கிறது. எல்லை கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்த பயன்படும் இது, 40 ஆயிரம் அடி உயரத்தில் தொடர்ந்து 40 மணி நேரம் பறக்கும் திறன் வாய்ந்தது. வானிலிருந்து தரை இலக்கை தாக்கும் ஹெல்பயர் ஏவுகணைகள் மற்றும் ஸ்மார்ட் வெடிகுண்டுகளை ஏந்திச் செல்லும் இவற்றை துல்லிய தாக்குதலுக்கு பயன்படுத்த முடியும். சீனாவிடம் இப்போது உள்ள ஆயுதம் சுமந்து செல்லும் ட்ரோன்களை விட திறன் வாய்ந்தது இந்த எம்கியூ-9.
இந்நிலையில், அமெரிக்காவிடமிருந்து 31 எம்கியூ-9 ரக ட்ரோன்களை வாங்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான ராணுவ தளவாட கொள்முதல் குழு கடந்த 15-ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இந்நிலையில், 31 ட்ரோன்களை வாங்குவது தொடர்பான நடைமுறை ஜூலை மாதம் முறைப்படி தொடங்க உள்ளது. இது தொடர்பான வேண்டுகோள் கடிதம் (எல்ஓஆர்) ஜூலை முதல் வாரத்தில் அமெரிக்க அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என பாதுகாப்புத் துறை உயர் அதிகாரி ஒருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்த பிறகு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment