
கோவை: ஜவளித் தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள சிறிய ஜவுளிப் பூங்கா திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் தராது என்றும், இதுபோன்ற புதிய திட்டங்களுக்கு செலவிடும் தொகையை ஏற்கெனவே பல்வேறு சிரமத்தில் உள்ள தொழில்துறையினரை காப்பாற்ற உதவ வேண்டும் என, தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர். ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் குறைந்தபட்சம் 2.5 ஏக்கர் நிலப்பரப்பில் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். தகுதிவாய்ந்த திட்ட மதிப்பில் (பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள்) 50 சதவீதம் அல்லது ரூ.2.50 கோடி இவற்றில் எது குறைவானதோ அது தமிழ்நாடு அரசின் மானியமாக வழங்கப்படும். தகுதி வாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்ட தொழில் வளர்ச்சியில் சிறிய அளவிலான ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பதன் மூலம் நடுத்தர நிறுவனங்களில் வளர்ச்சி ஏற்பட்டு மாவட்டத்தில் வேலைவாய்ப்பு பெருகுவதோடு, அதிகளவில் அன்னியச் செலாவணி ஈட்டுவதற்கு வாய்ப்புகள் ஏற்படும் என அரசு சார்பில் கூறப்பட்டு வரும் நிலையில், அரசின் இத்திட்டம் நூற்பாலைகளுக்கு பயன் தராது என தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment