
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே அ.கருங்குளத்தில் எம்.முருகேசன் (68) விவசாயத்தில் சாதித்ததோடு, நில தானத்திலும் முன்னோடியாக விளங்கி வருகிறார். அவருக்கு 1,000 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. ஆனால், அப்பகுதி நீர்வளம் குறைந்த வறண்ட பகுதி. இதனால் பலரும் விவசாயத்தை கைவிட்டு, வெளியூர்களுக்கு இடம் பெயர தொடங்கினர். இதனால் விவசாயத்தை மேம்படுத்தி உள்ளூரிலேயே வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டுமென முருகேசன் நினைத்தார். ஆனால், அதற்கு போதுமான நீராதாரம் இல்லை. இதையடுத்து நிலத்தை சுற்றிலும் அகழி அமைத்து, மொத்தமாக ஒரே இடத்துக்கு மழைநீரை கொண்டு வந்தார். இதன்மூலம் 10 ஏக்கரில் கண்மாய் போன்ற நீர்நிலையை உருவாக்கினார். இந்த நீர்நிலை என்றுமே வற்றாத பொய்கையாக உள்ளது.
மேலும் ஆங்காங்கே கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலமாகவும் நீர் ஆதாரங்களை உருவாக்கினார். அவற்றை பயன்படுத்தி 300 ஏக்கரில் அல்போன்சா மாங்கன்றுகளை நடவு செய்தார். மாங்கன்றுகளை அவர் பெங்களூருவில் இருந்து வாங்கி வந்தார். 10 மீட்டருக்கு ஒன்று என 300 ஏக்கரில் 10,000-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நடவு செய்தார். 20 ஆண்டுகள் கடந்தநிலையில் பெரிய மரங்களாக வளர்ந்திருக்கின்றன. இயற்கை விவசாய முறையை கடைபிடித்து வருகிறார். முழுமையாக சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. ஆண்டுக்கு 300 டன் முதல் 500 டன் வரை மாம்பழங்கள் கிடைக்கின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment